அம்பத்தூரில் தமிழ்நாடு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இத்தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடமாநில மாணவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டது, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நகைக் கொள்ளை நிகழ்வுகளிலும், பல இடங்களில் ஏடிஎம் மற்றும் வங்கிக் கொள்ளை நிகழ்வுகளிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டது, கூலிப்படையாக தமிழ்நாட்டுக்கு வந்து கொலைகளை நிகழ்த்திய வட இந்தியர்கள் விமானம் ஏறி தங்கள் மாநிலங்களுக்கு சென்றது, கோவை உள்ளிட்ட பல இடங்களில் குடி போதையில் பெண்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் வட மாநிலத்தவர்கள் நடந்து கொண்டது என தொடர்ந்து இதுவரை பல்வேறு குற்றங்கள் வடமாநிலத்தவர்களால் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில், வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழ்நாடு காவல் துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டனர்.
அக்குற்றங்களின் தொடர்ச்சியாக, சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று, மது போதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழ்நாட்டு காவலர்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கடுமையாகத் தாக்கி இருப்பது, அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் வடமாநிலத்தவர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்களை தடுக்க, தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால், இது போன்ற கொடூரச் செயல்கள் அரங்கேறி இருக்காது. ஆனால், தமிழ்நாடு காவல்துறையின் அலட்சியப் போக்கே, தற்போது காவல்துறையினரையை கொடூரமாக தாக்கும் அளவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

குற்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டும், வெளி மாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு காவல் துறையினர், இவர்களை முறையாக கண்காணிப்பதற்கான நிரந்தரப் பொறியமைவு எதையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, மண்ணின் மக்களின் மீது தாக்குதல் நடத்தி வந்த வடமாநிலத்தவர்கள், தற்போது, 2வது முறையாக காவல்துறையினர் மீதே தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.
தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற ஒன்றிய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது.தமிழின அழித்தொழிப்பிற்கு அச்சாரமாக தமிழ்நாட்டு மண்ணில் ஆதிக்கம் செய்யும், பாஜக-வின் பின் புலத்துடன் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் மூலமாக, குஜராத், உத்தரப்பிரதேசத்தை போன்று மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன் வாயிலாக, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடித்து மொத்த மண்ணின் மக்களை சிறுபான்மையாக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது.ஒன்றிய பாஜக அரசு கொடுத்த தைரியத்தின் காரணமாக தான், கோவை, திருப்பூரில் இந்தியில் பிரச்சாரம், திருப்பூரில் கலவரம் ஆகிய குற்ற நிகழ்வுகள் அரங்கேறியது. அதன் மற்றொரு சிக்கல் தான், காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலும்.எனவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழநாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் குவித்து காணப்படுகின்ற வடமாநிலத்தவர்களை கண்காணிக்க, காவல்துறையில் தனி பிரிவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.
கடந்த 2000ம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பியது. பின்னர் 2011ம் ஆண்டு, பல மடங்கு அதிகரித்து சற்றொப்ப 3 லட்சத்து 96,906 வெளி நாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா. அதுபோன்று, குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்ற வடமாநிலத்தவர்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.வெளியாரை வெளியேற்றுவதென்பது வெறும், தமிழர்களின் வேலை-வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்பதையும், தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
மேலும், அம்பத்தூரில் தமிழ்நாடு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை பெற்றுத் தரவும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும், தமிழ்நாடு அரசு விழிப்புடன் செயலாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.