சென்னை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீன் கடைகளை அகற்றியதை எதிர்த்து மீனவ மக்கள் 2ம் நாளாக போராடும் நிலையில் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றார்.
கடற்கரையில் மீன்கள் விற்கக்கூடாது. ஆனால் கடலுக்குள் பேனா வைக்கலாமா?. இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?என்றார்.சீமான்
சென்னை, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் வரையுள்ள லூப் சாலையில் மீன் கடைகள், உணவகங்களை அகற்ற அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 12-ம் தேதி கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் அந்தப் பகுதியில் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், மீனவர்களின் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

மீனவ மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமான், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மீனவர்கள் மீன் விற்கும் இந்தச் சாலையைப் பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்காகத்தான் எனத் தெரிவித்து அரசு இதைக் கையகப்படுத்திக்கொண்டது. இந்தச் சாலையில், மீன்கடை வைத்திருப்பவர்கள் கட்டடமோ, தகரக் கொட்டகையோ அமைத்துக்கொண்டு இடத்தை ஆக்கிரமிக்கவில்லை. பெரிய குடையை வைத்துக்கொண்டு அதன் நிழலில் அமர்ந்து, மீன் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். படகு கரை சேருகிற இந்தப் பகுதியிலிருந்து மீன்களை வாங்கி வந்து இங்கு விற்கிறார்கள். அவர்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது.
நீங்கள் மீன் சந்தை கட்டித்தரும் வரை மீன்களை நாங்கள் விற்கக் கூடாதா… கடற்கரையில் மீன் விற்கக் கூடாது எனத் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்தான், உலகப் புகழ்பெற்ற உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில் சமாதி கட்ட அனுமதி தந்தது. கடற்கரையோரத்தில் மீன் விற்கக் கூடாதாம். ஆனால், கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் வைக்கலாமா… இந்தக் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறதா… சமாதி கட்டுவதில் காட்டும் ஆர்வம் சந்தையைக் கட்டுவதில் இல்லையே?
எங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தூர இடத்தில் நீங்கள் மீன் சந்தையைக் கட்டித் தருகிறீர்கள் என்றால், இங்கிருந்து அந்தச் சந்தைக்கு மீன்களைத் தூக்கிக்கொண்டு போய் விற்று வருவதற்கான தூக்குக் கூலியே எங்களின் உழைப்பை எடுத்துவிடுமே… அதற்கும் அரசிடம் பதில் இருக்காது” என்றார் ஆவேசமாக.தொடர்ந்து அந்த மக்களுக்கு ஆதரவாக போராடப்போவதாகவும் சீமான் தெரிவித்தார்.