சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் 1996- 2001 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு திடீரென வேலூருக்கு மாற்றப்பட்டது வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி உள்ளிட்டோரை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடி தரப்பில் விடுவிக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்தார்.

இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி நடைமுறைப்படி இந்த வழக்கு நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கூறினார் இதை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூத்துறை கிராமத்தில் திமுக ஆட்சி காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரியில் செம்மண் அள்ளிய வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில் அந்த வழக்கு விசாரணையில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு செய்திருந்த நிலையில் அவர்கள் தரப்பு நியாயத்தையும் பெற்று அரசு தரப்பு இயங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார் இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளன.