மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு

3 Min Read
பங்காரு அடிகளார்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார்(83) மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் வசித்த பகுதியில், அருள்வாக்கு சொல்வதில் தொடங்கி, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை நடத்தியதில் பிரபலம் அடைந்தார். ஆதிபராசக்தியின் வெளிப்பாடாகத் தன்னை அவர் அறிவித்துக்கொண்டதால், அவருக்கு பக்தர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவரை ‘அம்மா’ என்று அழைத்தனர்.

பங்காரு

அவரின் வழிபாட்டு மன்றங்கள் காஞ்சிபுரத்தை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் 1980களின் தொடக்கத்தில் பரவியது. தற்போது, 7,000க்கும் மேற்பட்ட பங்காரு அடிகளாரின் வழிபாட்டு மன்றங்கள் இந்தியா உள்பட 10 நாடுகளில் செயல்படுவதாக அவர் நடத்தி வந்த அறக்கட்டளை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்கள் மட்டும் மாலை போட்டுச் செல்வது போல, பெண்கள் மாலை போட்டுக்கொண்டு ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் வழிமுறையை அவர் கொண்டு வந்ததால், பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் கூட்டமாக அவரது கோவிலுக்கு வந்தனர்.

ஒரு கட்டத்தில், அவரது அறக்கட்டளை மூலமாக, மேல்மருவத்தூர் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் இவரின் கீழ் தொடங்கப்பட்டன. 2019இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. தமிழ்நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் இவரது பக்தர்களாக இருந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர்

மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிகச் சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. அவரது ஆன்மிக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review