சென்னையில் இன்று பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரியார் இல்லை என்றால் நான் டாக்டர் ஆகியிருக்க முடியாது என்று உருக்கமாக ஒர் பேட்டியை கொடுத்திருக்கிறார்.
சென்னையில் அனைத்திந்திய எம்பிசி ரயில்வே பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அன்புமணி, “சமூக நீதியின் அடிப்படையே இட ஒதுக்கீடுதான். இதை பற்றி தெரியாமலேயே சில கட்சி தலைவர்கள் அரசியல் கட்சி நடத்தி வருகின்றனர். தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் எனது தந்தையும் டாக்டர் ஆகி இருக்க முடியாது. என் தந்தை ஏரோட்டிக்கொண்டிருப்பார் அவருக்கு உதவியாக நான் இருந்திருப்பேன் ” என்று கூறினார்.
சமூக நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். முதலில் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதன்படி செய்லபட வேண்டும்.
டாக்டர் அம்பேத்கரை ஒரு வட்டத்திற்குள் வைத்து விட்டார்கள். காந்தியை போல அம்பேத்கரும் முக்கியமானவர். அவரு எல்லோருக்குமான தலைவர் என கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸிடம் ஆளுநர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அதே நேரத்தில் ஆளுநர் என்பவர் அரசுடன் சேர்ந்து அந்த மாநிலத்தை முன்னேற்ற வேண்டுமே தவிர
எந்த கட்சி சார்ந்தும் செயல்படக்கூடாது. நடுநிலையயாக இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து குற்றசாட்டு வைத்துள்ள ஆளுநர் அதற்கான ஆதாரத்தை வெளியிடவேண்டும் என்றார்.

தேர்தல் வியூகம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவர், தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல்தான் பாமகவின் இலக்கு. எங்களோடு ஒருமித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம். அதற்கான வியூகத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னெடுப்போம் என கூறினார்.
டெல்டா நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து பேசிய அன்புமணி, டெல்டா பகுதிகளை சேர்ந்த சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. அதற்கு காரணம், மேற்கண்ட 3 சுரங்கங்களை ஏலமெடுக்க யாருமே முன் வரவில்லை. அதனால் தான் ஏல பட்டியலில் இருந்து மூன்று இடங்களும் நீக்கப்பட்டுள்ளதே தவிர அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று குறிப்பிடவில்லை.
இதில் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து பெரிய சூழ்ச்சியை செய்கிறது. தஞ்சாவூரில் நிலக்கரி சுரங்கம் வருகிறது என்பதை கேட்டவுடனே அரசியல் கட்சிகளுக்கு கோவம் வந்துவிட்டது. ஆனால், கடலூரில் வந்தபோது ஏன் அந்த கோவம் வரவில்லை? கடலூர் மக்கள் அனைவரும் பாவப்பட்ட மக்களா? என அன்புமணி ராமதாஸ் காட்டமாக கேள்விகளை எழுப்பினார்