- தென்காசி மாவட்டத்தில் செங்கல் சூளை தயாரிப்பு பணிக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை எதிர்த்து வழக்கு.
- செங்கல் சூளை தயாரிப்பை நிறுத்த மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பூமிநாதன் உள்ளிட்ட 9 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “நாங்கள் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பகுதியில் 46 ஆண்டுகளுக்கும்,மேலாக செங்கல் சூளைகளை நடத்தி
வருகிறோம்.

இந்த பகுதியில் சுமார் 150 செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே 43 நாட்டு செங்கல் தயாரிக்கும் சூளைகளில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இந்நிலையில் மீதமுள்ள சூளைகளையும் மூடும் விதமாக, சிவகிரியின் வருவாய் கோட்டாட்சியர் செங்கல் சூளைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முறையாக அனுமதி பெற்று 46 ஆண்டுகளாக இப்பணியை செய்து வரும் நிலையில் 6000 பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். செங்கல் சூளைகளுக்கு முறையாக உரிமம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், திடீரென செங்கல் சூளைகளை மூடினால் ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில், சிறு தொழிலாக நடத்தப்படும் செங்கல் சூளைகளுக்கு உரிமம் வழங்க கோரியும்
மேலும் செங்கல் சூளை நடத்தும் பணிகளில் மாவட்ட வருவாய் துறையினர் தலையிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இதையும் கொஞ்சம் படிங்க: https://thenewscollect.com/illegal-land-allotment-case-against-minister-i-periyasamy-madras-high-court-adjourned-the-trial-to-september-13/
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், தென்காசி மாவட்ட ஆட்சியர், சிவகிரி வருவாய் கோட்டாட்சியர் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.