- கூலி பிரிப்பதில் தகராறு சக தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள்.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்,27. இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இதே கடையில், பெரம்பலுாரைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவர், திருவேற்காட்டில் உள்ள தன் சித்தி வீட்டில் தங்கியிருந்து, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சுமைகளை ஏற்றி இறக்குவதற்கு கிடைக்கும் கூலியை, தியாகராஜன் பிரித்து கொடுத்து வந்துள்ளார். கூலி பணத்தை பிரித்து கொடுக்கும் போது, ரெங்கசாமிக்கு குறைவான கூலி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை அவர் தட்டி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, கடந்தாண்டு ஏப்.,8ல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தியாகராஜன், ரெங்கசாமியை கையால் தாக்கி கீழே தள்ளினார்.
தலையில் காயம் அடைந்த ரெங்கசாமி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 17வது கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்.தோத்திரமேரி முன் நடந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.சரவணன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தியாகராஜன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.