மறைமலை அடிகளின் புகழைப் போற்றி வணங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”தமிழ் மீது கொண்ட தணியாத ஆர்வத்தால், தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய மறைமலை அடிகள் பிறந்த தினம் இன்று.
தமிழ்க்கலைச்சொல்லாக்கம், ஆட்சிமொழி தமிழ் இயக்கம் முதலானவற்றின் முதன்மை ஆளுமையாகத் திகழ்ந்தவர். தலைசிறந்த சைவ சித்தாந்த அறிஞராகவும் தமிழகம், இலங்கை எனப் பயணம் செய்து சைவக் கோட்பாடுகளைப் பரப்பிய பெருமைக்கும் உரியவர்.

4000க்கும் அதிகமான தமிழ், வடமொழி, ஆங்கில புத்தங்களைக் கொண்ட நூலகத்தை உருவாக்கிய மறைமலை அடிகள், தான் எழுதிய புத்தகங்களின் பதிப்புரிமையைப் பொதுமக்களுக்கே வழங்கிய பெருமைக்குரியவர். அவரது புத்தகங்கள் தற்போது சென்னை கன்னிமாரா நூலகத்தில் தனிப் பிரிவாகச் செயல்பட்டு வருகிறது.
தனித்தமிழியக்க முன்னோடியாகவும், சைவ சமயத்தை வழக்கமான சடங்குகள், வழிபாடுகளிலிருந்து அதன் அடிப்படையான சைவசித்தாந்த தத்துவம் மற்றும் யோகமுறைகளை நோக்கிக் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவராகவும் விளங்கிய மறைமலை அடிகளின் புகழைப் போற்றி வணங்குவோம்” எனக் கூறியுள்ளார்.