- கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், நாளை அக்டோபர் 16 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17 ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவுக்குப் பிறகு இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கோவையில் பள்ளிகள் இன்று அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சில பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க நிர்பந்திக்கக் கூடாது என பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/1500-rupees-bribe-to-convert-commercial-electricity-connection-to-residential-connection-police-arrested-red-handed/
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்