கிருஷ்ணகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை NCC (தேசிய மாணவர் படை) முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக அதே பள்ளியில் படிக்கும் 17 மாணவிகள் அங்கே தங்கியுள்ளனர்.
இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை NCC பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் என்பவர் தனியாக அழைத்து சென்று, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.இதை வெளிய சொன்னால் கொலை செய்யுதுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் இருபினும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லியிடம் கூறியுள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று மாணவியிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவிக்கு உடல்நிலை பிரச்னை ஏற்பட்டதால், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கே பயிற்சி பெற்று வந்த மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட சிவராமனுக்கு உறுதுணையாக இருந்ததாக பள்ளியின் முதல்வர் சதீஷ் குமார், தாளாளர், பயிற்சியாளர் என மொத்தம் 7 பேரை போலீசார் நேற்று (ஆக. 18) கைது செய்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து சிவராமன் நீக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை போலீசார் கைது செய்தனர்.
நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது தடுமாறி விழுந்ததால், அவரது வலது காலில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ் குமார், தாளாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமையில் மேலும் 11 நபர்கள் சம்மந்தப் பட்டிருப்பதாக மாணவிகளின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.