கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற இரண்டு அடுக்கு சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரா விபத்தில் இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் கடலுக்கடியில் இன்னும் 10 -க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எஞ்சியிருப்பவர்களை தேடி மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 20 பயணிகள் மட்டுமே செல்லக்கூடிய இந்த சொகுசு படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இந்த படகு தனூரைச் சேர்ந்த நாசர் என்பவருக்கு சொந்தமானது என்பதும் , மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக சொகுசு படகாக மாற்றியிருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .
விபத்தில் சிக்கிய படகுக்கு சுற்றுலாப் படகுகளுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் , உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்த படகு இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது . படகு பயணம் விதிமுறைகளை மீறி உள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

படகின் உரிமையாளர் தனூரைச் சேர்ந்த நாசர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது தலை மறைவாகியுளார் . நாசரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று காலை கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் மீட்புப்பணிகளை பார்வையிட்டார் , மீட்பு பணியினை துரித படுத்தும் படியும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் .

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பினராயி விஜயன் இந்த விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார் . மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாரை அடையலாம் கண்டுபிடித்து அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பு நிதியாக வழங்கப்படும் என்று தெரிவித்தார் .