காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்.
கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா , மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகதாது அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம் ஆகும்.
தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், அம்மா நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
எனவே, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.