2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி .
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஜூன் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 67,237 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 68,561 கோடியும் ஆகும்.
2023 ஜூன் மாத வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும். நான்காவது முறையாக, மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.60 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூன் மாதத்தில், ரூ.9600.63 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியிலிருந்து ரூ 210.38 கோடி வசூலாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,”மாநிலங்களின் வருவாய் பெருக்கத்தை அதிகரிக்க ஜி.எஸ்.டி. உதவியிருக்கிறது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவின் மறைமுக வரி அமைப்பு துண்டாடப்பட்டது என்றும் ஒவ்வொரு மாநிலமும் தொழில்துறை மற்றும் நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான சந்தையாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், ஜி.எஸ்.டி.க்கு முன்பு மாநிலங்களின் வருவாய் பெருக்கம் 0.72 ஆக இருந்ததாக இருந்த நிலையில், ஜி.எஸ்.டி.க்கு பின்னர் இது 1.22 ஆக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. மிகப்பெரும் வருவாய் பெருக்கத்தை ஏற்படுத்தி மட்டுமல்லாமல், மத்திய அரசும், மாநிலங்களும் பலனடைந்துள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்குப்பின் எந்த மாநிலத்தின் வருவாயும் பாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.