தேர்தல் வரவிருப்பதால் தவறான தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம் என பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநர் லீமாரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
பிரபல லாட்டரி அதிபரும் மார்ட்டின் குழும நிறுவனங்களின் தலைவருமான மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் மாட்டின் குழும நிறுவனங்களின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனை இன்று காலை நிறைவடைந்தது.

இந்த நிலையில் சோதனை தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில் கடந்த 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மார்டின் குழும நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனை மேற்குவங்க வருமான வரித்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை எனவும் அமலாக்கத்துறை சோதனை என தவறாக பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் தங்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை அமலாக்கத்துறை சோதனை என பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது எனவும், இதுவரை சரியான முறையில் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி போன்றவை தங்கள் நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த 1985-86 ஆம் ஆண்டு முதல் 2022-2023 ஆம் நிதியாண்டு வரை 600 கோடி வருமான வரியாக அரசுக்கு செலுத்தியுள்ளதாகவும், நாட்டிலேயே அதிக அளவிலான வருமான வரி செலுத்தியது தங்கள் நிறுவனம் தான் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்நிறுவன இயக்குனரும் தொழிலதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின், இந்த சோதனை வழக்கமான சோதனை தான் எனவும் எந்தவித தகவலும் அளிக்காமல் அதிகாரிகள் திடீரென தங்கள் வீட்டிற்கு வந்து கணவர் மார்ட்டின் அறையில் இருக்கும் போதே சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் மட்டும் சோதனை இருக்கும் என தெரிவித்த நிலையில் ஐந்து நாட்கள் இந்த சோதனை நீடித்ததாகவும் சோதனைக்கு தாங்கள் ஒத்துழைத்ததாகவும் குறிப்பிட்ட அவர், எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் நெருங்கும் சூழலில் தவறான தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம் என கருத்துவதாகவும் மேற்குவங்க மாநில வருமான வரித்துறையினர் தான் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் அமலாக்க துறை சோதனை என தவறாக செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.மேலும் கோவை மாநகர பகுதிகளில் ஆர்ஃபிசியல் இண்டலிஜென்ஸ் தொழில் நுட்பத்துடனான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ மார்ட்டின் குழுமம் சார்பில் ஏழரை கோடி ரூபாய் வழங்க இருப்பதாகவும் இதன் மூலம் 248 மீட்டர் தூரத்திற்கு கேமராக்கள் நிறுவப்பட இருப்பதாகவும் லீமாரோஸ் மார்ட்டின் சுட்டிக்காட்டினார்.