விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் வாழ்வுத்துறை சார்பில் ,உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி நடைபெற்றது.இதை மாவட்ட கலெக்டர் பழனி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் அனைத்துத்துறை அலுவலர்கள்,பணியாளர்கள்,இ.எஸ்.செவிலிய கல்லூரி மாணவ – மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு , மக்கள்தொகையை கட்டுப்புடுத்துவது தொடர்பான விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் பழனி பேசுகையில் விழுப்புரம் மாவட்டத்தின் மக்கள் தொகை 20.70 லட்சம் ஆகும் மாவட்டத்தின் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் 1000 ஆணுக்கு 927 பெண் என உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பிறப்பு விகிதம் 11.8 ஆகவும், இறப்பு விகிதம் 5.16 ஆகவும் உள்ளது.
எனவே நாம் அனைவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு அரசால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோமானால் நமக்கு மட்டுமல்லாமல் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் சிறப்பான சமுதாயத்தை ஏற்படுத்தி தர முடியும் என்றார் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அரசு துறை அலுவலர்கள் பணியாளர்கள் மாணவ மாணவிகள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன், துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி,மருத்துவ ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மணிமேகலை, காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சுதாகர், தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் கோகிலவாணி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.