மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் ஐபிஎம் நிறுவனம் 7,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாகவும், ஊழியர்களுக்குப் பதிலாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாகப் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். பெரு நிறுவனமான கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் வரிசையில் தற்போது ஐபிஎம் நிறுவனமும் உள்ளது.
அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களையும், ஆல்பபெட் நிறுவனம் 12,000 ஊழியர்களையும், ஸ்பாடிஃபை நிறுவனம் 600 ஊழியர்களையும், ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களையும், டிஸ்னி 7,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது.

இந்நிலையில், மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா பேட்டி அளித்திருந்தார். அவர் அளித்த பேட்டியில்,”மனிதவள பிரிவு, பேக் ஆஃபீஸ் போன்ற பிரிவுகளில் ஆள்கள் சேர்ப்பைக் குறைக்கவும், ஆள்கள் சேர்ப்பை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளாத ஊழியர்கள் 26,000 பேர் உள்ளனர். அடுத்த 5 வருடத்தில் 26,000 ஊழியர்களில் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஐபிஎம் முடிவு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் ஊழியர்களின் இடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல், தொழிற்சாலைகளில் Chat GPT மற்றும் Open AI தொழில்நுட்பம் மூலம் வேலைத்திறனை அதிகரிக்க முடியும்” எனவும் கூறியுள்ளார்.