எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்கள் பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை இன்று ஆஜர்படுத்த உத்தர்விட்டிருந்தது.
அதன்படி புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, குளுகோஸ் ஏற்றுவதற்கு எதுவாக கையில் Intravenous therapy என்ற சொல்ல கூடிய நரம்பு வழியாக மருந்தால் செலுத்தப்படும் கருவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .
ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை சாட்சிய குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி, குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, தான் நிரபராதி எனவும், தனக்கு எதிரான இந்த வழக்கு, புனையப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை எனவும், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும், தான் குற்றவாளி அல்ல எனவும் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 54 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.