கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14-ம் தேதி) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடிட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால்,விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 14-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சிறிது தாமதமாக தொடங்கினாலும் தற்போது சூடுபிடித்து கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.

இதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பர் 14-ம் தேதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை (நவம்பர் 13) விடுத்த எச்சரிக்கையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக,விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
இதேபோல், கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி அறிவித்துள்ளார்.