கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த 3 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர்.
வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் கற்றுக்கொண்டுள்ளனர்.பின்னர் ஆன்லைன் மூலம் கஞ்சா செடிக்கான விதைகளை வாங்கியுள்ளனர்.
வீட்டின் ஒரு அறையில் கூடாரம் அமைத்து ஹைடெக் முறையில் செயற்கையாக சூரிய வெளிச்சம் கொண்டுவரும் வகையில் விளக்குகளை அமைத்து கஞ்சா செடி வளர்த்துள்ளனர்.செயற்கை காற்றுக்காக 6க்கும் மேற்பட்ட மின்விசிறிகளை அமைத்துள்ளனர்.

கடந்த மூன்றரை மாதங்களாக இவர்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து அதை சக மாணவர்கள் மூலம் வெளியே விற்பனை செய்துள்ளனர்.இதையடுத்து அந்த 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ஒட்டுமொத்தமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து 227 கிராம் உலரவைக்கப்பட்ட கஞ்சா, 1.5 கிலோ எடைகொண்ட கஞ்சா செடி, கஞ்சா விதைகள், 19 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.