தமிழ்நாடு ஆளுநர் அவர் பணியை தவிர அனைத்து வேலைகளையும் செய்கிறார். பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம். ஆர்என் ரவி ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பாஜக தலைவர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வந்தது போல் தெரிகிறது. ஆர்என் ரவி ஆளுநர் மாளிகையில் அமர்ந்து தமிழக பாஜக தலைவராக செயல்படுகிறார்.தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மிகக்கடுமையாக விமர்சனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திராவிடத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மாநில அரசையும் அவர் சாடியுள்ளார்.ஆளுநர் ஆர்என் சனாதனம் பற்றி பெருமையாக பேசுவதோடு, திராவிடத்தை அடிக்கடி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இதுதான் மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. மேலும் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்என் ரவி தனது உரையின் சில பாராக்களை படிக்காமல் விட்டார். இதற்கு எதிராக ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி பாதியில் வெளியேறினார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த பேட்டியில் ஆளுநர் ஆர்என் ரவி திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம் மட்டுமே. காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது. இருப்பினும் கூட தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் முக ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரிடம் நானும் என்னிடம் அவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். ஆனால் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. அபத்தமானது

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை முழுதும் அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன் அல்லவா என்று கூறியுள்ளார்”
இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது மதசார்பற்ற நாட்டில் பொறுப்புணர்வை மீறி ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுகிறார். அவர் தான் எடுத்த பதவிப்பிரமாணத்தை மீறி செயல்பட்டு வருகிறார். நிர்வாக விவகாரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார். அதோடு அடிப்படையற்ற கருத்துகளை பேசி வருகிறார். இந்த அடிப்படையற்ற கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் அது சரியான கருத்துகளாக புரிந்து கொள்ளப்படும். இதனால் தான் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயக சக்திகளின் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதவை பல மாதங்களாக கிடப்பில் போட்டார். இதன் மூலம் அவர் எத்தகைய மனிதர் என்பது தெரியவரும். திராவிடத்துக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளை திரிக்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். மேலும் மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பமில்லை என்றால் வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல; ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.