உயிரிழந்த தம்பதி
கடன் தொல்லையால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடரும் நிலையில் மீண்டும் ஒரு தற்கொலை நிகழ்வு.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் மாரிமுத்து (69). இவரது மனைவி மல்லிகா (58).இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். வாடகை வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக மாரிமுத்து வேலைக்கு செல்லவில்லை, மனைவி மட்டும் கிடைக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.
இதனால் குடும்ப செலவிற்கு பணம் இன்றி கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத கடன் சுமையில் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்று ஏழூர் பகுதியில் உள்ள பாறைக்குழியில் இருவரின் உடல் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இருவரும் சாணி பவுடர் குடித்துவிட்டு அதன் பின் பாறைக்குழியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.