பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது.

அப்படையினர் முகாமுக்குள் நுழைந்தனர். முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், அதிவிரைவு படை முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர் .அங்குச் சேதங்களை ஆய்வு மேற்கொண்ட அதிவிரைவு படையினர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்களின் சடலத்தை மீட்டனர் .

அவர்கள் பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது . அவர்கள் பெயர்கள் சாகர் பண்ணே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது. உணவு கூடத்துக்குப் பின்னால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் ராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளது .
இதில் இறந்தவர்களில் ஒருவரான கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் அருகே மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி நெசவுத் தொழிலாளி ஆவார். ராணுவ வீரரின் தாயார் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
திருமணம் ஆகாத நிலையில், பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டுத் திரும்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.