- திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், ஊழியர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
சென்னை, திருவேற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவிலில்,12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கோவில் பெண் தர்மகர்த்தா வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கோவில் பெண் தர்மகர்த்தா வளர்மதி உள்ளிட்டோர், சாமி படத்துக்கு கீழ் இருக்கையை போட்டுக் கொண்டு, “ராஜினாமா செய்வதாக” க் கூறி, அரசு படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போல, ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் பெண் தர்மகர்த்தா வளர்மதி நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், தர்மகர்த்தா வளர்மதியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாகவும், அவரிடம் விளக்கம் கேட்ட போது, இதுபோல் செயல்பட மாட்டேன் என உறுதி தெரிவித்ததுடன் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியுள்ளதாகவும், மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளதாகவும், கோவில் மேம்பாட்டுக்கு பல காரியங்களை அவர் செய்துள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கு குற்றக் குறிப்பாணை (மெமோ) அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க https://thenewscollect.com/upcoming-movies-on-diwali-go-watch-any-movie-heres-the-full-list/
இதையடுத்து, கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம்; நடனம் ஆடலாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, கடவுள் மீது பக்தி உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வளர்மதியின் மன்னிப்பை ஏற்று, வழக்கை முடித்து வைத்தார். மேலும், ரீல்ஸில் நடித்த ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.