தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.இப்படியே போனால் சாதாரண மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியானதாக மாறிவிடும் என அச்சப்படுகிறார்கள். அரசு உடனே தலையிட்டு இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் நினைக்கிறார்கள் பொது மக்கள்.
கடந்த காலங்களை விட தக்காளி விலை உயர்வு விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அதனைத்தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே மளிகை பொருட்களில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக மளிகை பொருட்களில் வரும் பூண்டு விலையும் உயர்ந்து இருக்கிறது.

மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பூண்டின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் நாளொன்றுக்கு சென்னைக்கு மட்டும் சுமார் 10 லாரிகளில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் சமீப நாட்களாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.25 என்ற மலிவான விலையில் கிடைத்தது. நல்ல தரமான உயர்ரக பூண்டு ஒரு கிலோ ரூ.60-க்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.80 முதல் ரூ.180 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்று சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், சீரகம், சோம்பு உள்பட சில பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.