- தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, தர்மாம்பாள் நகரை சேர்ந்தவர் காமராஜ், 60. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு மகள் உள்ளார். அவர் வெளியூரில் இருப்பதால், காமராஜ் மட்டும் தனியாக வசிக்கிறார்.
இந்நிலையில், தன் மகள் திருமணத்திற்காக, பல ஆண்டுகளாக விவசாயம் செய்து, சேமித்து வைத்திருந்த, 21 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு இருக்காது என்பதால், தஞ்சாவூர், திருவள்ளூர் நகரில் வசிக்கும் தன் அண்ணன் கவுன்ராஜிடம் கொடுத்து வைக்க திட்டமிட்டார். இதையடுத்து, கடந்த 19ம் தேதி, ஜவுளிக்கடையில் இலவசமாக கொடுத்த சாதாரண பையில் பணத்தை வைத்து, டூ – வீலரில் சென்றார். நடுப்படுகை என்ற கிராமத்தில் வேகத்தடையில் டூ – வீலர் ஏறி இறங்கும்போது, பை தவறி விழுந்தது.
இதை அறியாமல், நீண்ட துாரம் சென்ற அவர், பையை காணாததால், வந்த வழி முழுதும் தேடினார்; எனினும் கிடைக்கவில்லை. இது குறித்து, மருவூர் போலீசில் புகார் அளித்தார். காமராஜ் சென்ற வழியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நடுப்படுகையை சேர்ந்த ஆடு மேய்க்கும் பெண், பணம் இருந்த பையை எடுத்து சென்றது தெரிந்தது. அந்த பெண்ணின் உறவினரிடம் இருந்த, 21 லட்சம் ரூபாயை மீட்டு டி.எஸ்.பி., அருள்மொழி அரசு நேற்று காமராஜிடம் ஒப்படைத்தார்.