வனத்துறையின் அலட்சியப் போக்கால் தினமும் நூற்றுக்கணக்கான அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகள் இறந்து வருவதாகவும் , இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
வங்கக் கடலோரம் அமைந்துள்ள கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் முட்டையிடுவதற்காக டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வந்து செல்லும். அவ்வாறு வரும் போது கடற்கரையோரம் கிடக்கும் பிளாஸ்டிக்கை , ஜெல்லி மீன்கள் என்று சாப்பிடும் போதும், ஆமைக்குஞ்சுகளுக்கு மயக்கம் ஏற்பட்டு கப்பல்களில் அடிப்பட்டும் ஆமைகள் உயிரிழந்து வருகிறது.
மேலும் கடற்கரையோரம் ஆமைகள் இடும் முட்டைகளை காகம், நாய்கள் உள்ளிட்டவை சாப்பிட்டு வீணாக்கி வருகிறது . இதனைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆமை இடும் முட்டைகளை ஆண்டுதோறும் சேகரித்து அதை பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டு வருகின்றனர்.
இதற்காக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் பொரிப்பகம் அமைத்து உள்ளனர். இந்த நிலையில் இன்று தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை ஓரம் ஏராளமான உயிரிழந்த ஆமைக்குஞ்சுகள் கிடந்துள்ளது . இதனை அப்பகுதிவழியாக சென்ற மீனவர்கள் எடுத்து ஒன்றாக வைத்தனர்.
மேலும் இவ்வளவு ஆமை குஞ்சுகள் எப்படி உயிரிழந்தது வனத்துறையினர் முறையாக ஆமைக்குஞ்சுகளை வைத்து பொறிப்பகத்தில் பாதுகாக்கவில்லையா எனக் கேள்வி எழுந்துள்ளது. மேலும் அதிகாலை குஞ்சு பொரிக்கும் ஆமைக்குஞ்சுகள் கடலை நோக்கிச் செல்ல முயலும் போது பொறிப்பகத்தின் சுற்றி அமைத்த சுவரில் மோதி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோன்று பொறிப்பகத்தில் பாதுகாத்த ஆமை குஞ்சுகளை நாய்கள் தூக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடற்கரையோரம் ஆமை முட்டைகளைச் சேகரிப்பு செய்ய உதவி புரிந்து ஆமைக்குஞ்சுகளை பராமரிக்கும் தன்னார்வலர்களை முறையாக ஊக்கப்படுத்தவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது