திமுக அரசு தமிழகத்தில் கடந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக அரசுப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகளுக்கு இலவசப் பயணம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிராமப் புற பெண்களுக்கு பெரிதும் இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருந்துவருகிறது. இருப்பினும், இந்தத் திட்டம் குறித்து அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
இலவசப் பயணத்தின் காரணமாக கிராமப் புறங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.சில இடங்களில் இந்த பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
அதைத்தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட இந்த திமுக அரசு வாங்கவில்லை. இதுதான் இந்த நிர்வாகத் திறனற்ற அரசின் சாதனை. போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை. இதில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு இந்த அரசு செயல்பட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.
எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்’ என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘திமுக ஆட்சி அமைந்தபின் எந்த அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்காக புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.அரசு மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் பொய்யும், புரட்டுமாய் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2,000 வழித்தடங்கள் முடக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணியில் சேர்க்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் சென்னையில் இருந்து இன்னமும் விழுப்புரம் வந்து செல்லும் பேருந்துகளில் நடத்துனர் இல்லாமல் தான் சென்றுவருகிறது.இது பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது,என்கிறார்கள் பயணிகள்.பயணிகளுக்கு சிரமமில்லாமல் பேருந்துகளை இயக்க வேண்டும் அரசு என்கிறார்கள் பொது மக்கள்.