
ஸ்ரீமதி வழக்கில் 2 ஆசிரியைகள் நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு மாணவியின் தாய் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற நீதிமன்றம், ஜூலை 5-ந் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.மாணவி மர்ம சாவுகடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து ஸ்ரீமதியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன் விசாரணை முடிந்து 1,362 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயர்களையும் வழக்கில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் கோர்ட்டில் ஆஜராகி தெரிவிக்குமாறு ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதற்காக அவர் கடந்த 5-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி, இவ்வழக்கில் இருந்து ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரையும் விடுவித்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாகவும், அதற்காக குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவற்றை தங்களுக்கு ஒப்படைக்குமாறு மனுதாக்கல் செய்தார்.

அதன்பேரில் அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதோடு மீண்டும் ஜூன் 21-ந் தேதி நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.காலஅவகாசம் கேட்டு மனுதாக்கல்இந்நிலையில் நேற்று மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது வக்கீல்கள் பா.பா மோகன், ரத்தினம், பிரபு, லூசியா ஆகியோருடன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினார். அப்போது, குற்றப்பத்திரிகை நகலை முழுமையாக படித்து பார்த்து ஆட்சேபனை தெரிவிக்க ஏதுவாக கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொண்டு அதற்கான மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, 2 வார காலம் அவகாசம் வழங்கியதோடு மீண்டும் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.