- தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறப்படும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலங்கள் குறித்த விபரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால் கோவிலில் வருவாயை கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுரேஷ் குமார் மற்றும் எஸ் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தீட்சிதர்கள் தரப்பில், கோவிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலைய துறையின் தாசில்தார் நிர்வகித்து வருவதாகவும் அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கோவிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் மூன்றாயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளதாகவும் அது குறித்து அறிக்கை கூற வேண்டும் என்றும் தீட்சிதர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதேபோல கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வழங்கும் பிரச்சனைகளை தீட்சிதர்கள் எடுத்துச் சென்ற போதிலும் கோவில் நிர்வாகத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் பங்களிப்பு தொகையை வழங்குவதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.காணிக்கை வரவு மற்றும் செலவு கணக்கை பராமரிக்க தனி திட்டத்தை வகுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலைத்துறை தரப்பில், கோவிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில் 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 2000 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்தும், ஆயிரம் ஏக்கரில் இருந்து ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பது குறித்தும், பக்தர்கள் காணிக்கை கணக்கில் வைக்காதது குறித்தும் அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், 2017 – 18ம் ஆண்டில் இருந்து 2021- 22ம் ஆண்டு வரையிலான வரவு – செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு நடைமுறையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு பரப்பு நிலம் உள்ளது என்பது குறித்து தாசில்தாரர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.மேலும், 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டு குறித்த முழு விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 3 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.