தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த கலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் உடையப்பன் 70 வயதாகுமிவர் மற்றும் இவரது மனைவி சம்பூரணம் 62 இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. உறவினர்கள் அரவணைப்பில், குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். உடையப்பனும் சம்பூரணமும் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் சென்று வந்துள்ளனர்.
பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.அதிக அளவில் கற்றும் வீசி வந்தது இந்நிலையில் வீட்டு வாசலில் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை.இன்று அதிகாலை 3 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக உடையப்பன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருளில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உடையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடையப்பனின் அலறல் சத்தம் கேட்டு அவரை தூக்குவதற்காக வந்த அவரது மனைவி சம்பூரணமும் மின்சாரம் தாக்கி பலியானார். இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்த பார்த்தபோது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக கிராம மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனை தொடர்ந்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடையப்பன் – சம்பூரணம் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டுசென்றனர்.
இதுகுறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த உடையப்பனின் உறவினரான காந்தி என்ற பெண்மணி கூறுகையில், மிதியக்குடிக்காடு கிராமம் முழுவதும் மின் கம்பிகள் பழுதடைந்து எந்த நேரமும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் உயிர் வாழ்கிறோம். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
கணவன் மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து மின்வாரியத்தனர் அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.