தலைவிரித்தாடும் மணல் கொள்ளை – கட்டுக்கடங்காத மணல்கொள்ளையர்கள் !
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததற்காக, கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அந்த முறப்பநாட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்ற இந்த சிறு கிராமம். இங்கு வசிக்கும் விவசாயி தான் பாலகிருஷ்ணன், தான் வாழும் ஊரிலேயே விவசாயம் மற்றும் ஆடுகள் வளர்ப்பு என்பதே இவரது தொழில். கடந்த 2019 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
அதே ஆண்டு இறுதியில் அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்தும் அதை ஒட்டியுள்ள சுடுகாட்டிலும் மண்ணை தோண்டி எலும்புகூடுகள் வெளியே சிதற கிடப்பதாக தனது வார்டு மக்கள் புகாரை பெற்று முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளார். இதனால் மணல் கொள்ளையர்களிடமிருந்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்நிலையில் தான் மதுரை கிளை நீதிமன்றத்தில் கடந்த 14.10.2020 ல் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்தும் நடந்த அடுத்த கட்ட விசாரணைகளில் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு மணல் கொள்ளையர்களால் கொலை மிரட்டல் இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் இருவரும் 19.11.2020 அன்று மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர்.
அதனடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்.அவருடைய பாதுகாப்பில் இப்போது வரை ஆடு மேய்த்து வருகிறார் பாலகிருஷ்ணன்.
இது பற்றி பாலகிருஷ்ணன் என்ன சொல்லுகிறார்…
கனிமவள சுரண்டலான மணல் கொள்ளையில் இளைஞர்களே அதிகம் ஈடுபடுகிறார்கள். அதிகமான லாபம் கிடைக்கிறது. வேனில் மணல் கடத்துகின்றனர். ஒரு வேன் இரண்டரை அல்லது மூன்று யூனிட் வரை மணல் கொண்டுசெல்லும். அதற்கு 25000 முதல் 30000 வரை பணம் கிடைக்கும். இதற்கு வருவாய்த்துறை காவல்துறையில் ஒரு சில அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர். இவர்கள் குறித்து புகார் கூறினால் காவல் நிலையத்தில் நம் பேச்சுக்கும், புகாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. எனவே மணல் கொள்ளை குறித்து நீதிமன்றத்தில் பல வழக்கு தொடுத்து இருக்கிறேன். வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிபிசிஐடி யிலும் என் புகாருக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
காவல்துறையில் ஒரு சில அதிகாரிகளால் ஒட்டு மொத்த சமூக ஆர்வலர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்கே கொலை செய்து விடுவோம் என மிரட்டல் இருப்பதால் கடந்த இரண்டரை வருடங்களாக நீதிமன்ற உத்தரவின்படி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆனா இந்த நிலை நீடிக்க கூடாது, நான் சாதாரண ஒரு விவசாயி. இந்த நாட்டில் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளை களை எடுக்க வேண்டும். மணல் கொள்ளை குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட கொள்ளையரிடமே நான் சொன்ன தவலை கொண்டு சென்று விடுகிறார்கள் சில காவலர்கள். உயரதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும் அவர்கள் சொல்வதை கீழே இருக்கும் அதிகாரிகள் கேட்பதில்லை. முறப்பநாடு பகுதியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதும் கஞ்சா பரவலாக விற்பனை நடப்பதும் உள்ளது இதனை நானே பலமுறை தகவல் கொடுத்து பிடித்துக் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் அவர்களை தண்டனை கொடுக்காமல் வெளியே விட்டு விடுகிறார்கள். இந்தப் பகுதி சேர்ந்த காவல்துறையினர் வெளி மாவட்டங்களில் வேலை பார்த்துக் கொண்டு மணல் கொள்ளும் சிக்கும் நபர்களுக்கு ஆதரவாக போன் மூலம் இங்குள்ள காவலர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அதனால் மணல் கொள்ளையர்கள் மீது சிறிய வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறார்கள்.
மணற்கொள்ளையர்களை பிடிக்காமல் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது கஷ்டமாகத்தான் உள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியை எப்போதும் கூடவே அழைத்துக் கொண்டு சுதந்திர இந்தியாவில் ஒரு பாமரன், ஒரு விவசாயி சுதந்திரமாக அலைய முடியவில்லை. இதனால் கஷ்டமாகத்தான் உள்ளது ஆனாலும் போலீஸ் இல்லாமல் என்னால் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலையும் மணல் மாபியாக்களால் உள்ளது.
தினமும் காலையில் எழுந்ததும் பால் மாடு இருக்கிறது மாடுகளில் இருந்து பால் கறக்க வேண்டும். ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றாலும் போலீசை உடன் அழைத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது இது நீடிக்ககூடாது. எனக்கு விவசாயம் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கேயும் போலீசை அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் என்னோடு போலீசாரும் வயலுக்குள் இறங்கி பாதுகாப்பு அளிக்கின்றார். இது நீடிக்க கூடாது சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.