தமிழக மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் கிடந்த சடலத்தின் அருகே பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இங்கு, இன்று காலை முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் கிடந்துள்ளார்.

ஆனால், அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து யாரும் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் அனைவரும் டிக்கெட்டுகளை வாங்கி சென்று கொண்டிருந்தனர். அவர் பக்கத்தில் சென்று பார்த்த போது தான் இறந்தது தெரியவந்தது. உடனே, ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், ரயில்வே போலீஸ் மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5 மணிநேரம் ஆகியும் சடலத்தை மீட்கவில்லை. இதனிடையே, முதியவரின் இறப்பு தெரியாமல் பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கும் வீடியோ இணையத்தில் பரவியது.

செங்கல்பட்டு நகர போலீசார் – ரயில்வே போலீசாருக்கு இடையே உள்ள எல்லை பிரச்னை காரணமாக சடலத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.