நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மாட்டுச்சாணம்: முழுமையான விசாரணை நடத்த வானதி கோரிக்கை

2 Min Read

புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. கடந்த 2023 நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டம், சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து முழுமையாக ஆய்வு நடத்துவதற்குள், அவசர அவசரமாக ஜேசிபி இயந்திரம் மூலம் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்படவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். கடந்த மார்ச் மாதம், மகளிர் நலத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்

உள்ளசில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனால், இப்போது மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பதக்கமும், பாராட்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேன்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட, மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம் நடந்து 15 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனாலும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியாத திமுக அரசு, அதுபோல நடக்கும் சம்பவங்களை மூடி மறைத்து வருகிறது.

எதற்கெடுத்தாலும் சமத்துவம், சமூக நீதி என்று தான் திமுக அரசு பேசுகிறது. ஆனால், உண்மையிலேயே திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. குடும்ப ஆட்சியும், ஊழலும் இருக்கும் இடத்தில் சமத்துவமும் இருக்காது. சமூக நீதியும் இருக்க முடியாது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும் மட்டுமே தமிழக காவல்துறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேங்கைவயல் சம்பவத்தில் திமுக அரசின் செயலற்றத்தன்மை வெளிப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review