திருவள்ளூரில் இருந்து திருப்பதி செல்லும் இருவழிச் சாலையை. நான்கு வழிச் சாலையாக விரிவுப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தஜி.கே. வாசன் எம்.பி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது,”தமிழகத்தையும், ஆந்திராவையும் இணைக்கும் நெடுஞ்சாலையாக எண். NH 205 விளங்குகிறது. இதில் தினம்தோறும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு பல்லாயிரகணக்கானோர் பயணிக்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த திருவள்ளுரில் இருந்து திருத்தணி வழியாக 2013 ஆம் ஆண்டிலிருந்து இருவழிப் பாதையாகவே விளங்கி வருகிறது. இந்த சாலையில் நடுவில் தடுப்பு சுவர் (Center Median) இல்லாமல் வாகன ஓட்டிகள், எதிர்நோக்கி வரும் வாகனங்களால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதனால் வாகன விபத்துகள் ஏற்பட மிகுந்த வாய்ப்புள்ளது. இந்த சாலை 32 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. இவற்றை நான்கு வழிப் பாதையாக விரிவுப்படுத்துவதால் பல்லாயிரகண்கானோர் பயன்பெறுவர்.
வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பு கருதி, புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் நான்குவழிப் பாதையைப் போல திருவள்ளுரில் இருந்து திருப்பதி செல்லும் சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.
இதனால் பாதுகாப்பான பயணம் ஏற்படும். அதோடு பயண நேரமும் குறையும். ஆகவே விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் எம்.பி அவர்கள் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்