தோழர் சங்கரய்யாவை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழகத்தின் மூத்த தலைவரும் முதுபெரும் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ தோழர் சங்கரய்யா(102) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல்லாண்டுகள் சிறையில் வாடியவர்.தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் வளர்வதற்கு பெரிதும் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கங்களுக்கும் உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தனது மற்றொரு பதிவில், தோழர் சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அத்துடன் நாட்டின் விடுதலைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீட்சிக்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.