கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.

இன்று காலை 6 50 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த டிஐஜி விஜயகுமார் பின்னர் அவருடைய மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கை துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தனது அறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் .
நேற்று இரவு துணை ஆணையர் சந்தீஷ் அவர்களின் குழந்தை பிறந்தநாள் விழாவிற்கு சென்று வந்த நிலையில் இந்த தற்கொலை சம்பவமானது அரங்கேறியுள்ளது .
எனினும் , அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லையென்றும் , மனஅழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது . இவரது தற்கொலைக்குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் விசாரணைக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதற்கட்டமாக தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி விஜயகுமாரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.