கோவையின் அருகே மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் மஞ்சப்பள்ளம் குறுக்கே இருந்த தரைபாலம் உடைந்து இளைஞர் வெள்ளநீரில் சிக்கினார்.
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
இதை தொடர்ந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை அதிகளவில் காணப்பட்டது.
சுந்தராபுரம்,மாச்சம்பாளையம், பிள்ளையார்புரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மதுக்கரை, வேலந்தாவளம் வழியாக கேரளா செல்லும் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பெருத்து ஓடியது.

இதில் மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு 4 அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில், தரைபாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதை தொடர்ந்து அந்த வழியாக வேலைக்கு சென்ற வீரப்பனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி செல்லும் வழியில் வெள்ள நீரில் வண்டியுடன் மாட்டிக்கொண்டார்.
அதை பார்த்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கயிறை கட்டி 1 மணி நேரத்திற்கு மேல் போராடி அவரை காப்பாற்றினார்கள்.
தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களை முழுமையாக போக்குவரத்து நிறுத்தி தடுப்புகள் அமைக்கப்பட்டனர்.