அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தங்க ரிஷப வாகனத்தில் உலா.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைக்க முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு சித்திரை மாத பிரதோஷ தினத்தையொட்டி,

அரிசி மாவு, மஞ்சள், தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

சித்திரை மாத பிரதோஷம் அண்ணாமலையார் திருக்கோயிலில், ஏராளமான பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர்.
முன்னதாக அண்ணாமலையார் திருக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகருக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் அபிஷேக பொடி பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதோஷ நாயகர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து மங்கள வாத்தியங்கள் சங்கொலி முழங்க மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தார்.