தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தின் சார்பில் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் சைகை முறையில் சட்டமன்ற பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் நேற்று சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இல் வலியுறுத்தியுள்ளவாறு மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்ற சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உள்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் 2023-24 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் சைகை விளக்க காணொளி தயாரித்து செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார். அதன்படி செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளில் தொகுப்பு யூடியூப் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில் சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி எ.வா வேலு, தங்கம் தென்னரசு, கீதாஜீவன் மா,சுபிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்