திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதித்திருப்பது சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பி.எல் 2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்தலாம் என்றும், ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும் மதுவை பயன்படுத்தலாம்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது தொடர்பாகக அண்ணாமலை கூறியதாவது,”கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.
மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.