- பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் – நீதிபதி,
செல்வகுமார் தனது செல் போன் காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும், மனுதாரர் செய்த ட்வீட்டை டெலிட் செய்வதோடு, அந்த ட்வீட் உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடப்பட்டது என சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.- நீதிபதி உத்தரவு.
தொடர்ந்து இதுபோல பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும் – நீதிபதி எச்சரிக்கை.
கடும் நிபந்தனை மற்றும் எச்சரிக்கை விடுத்து முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, திருப்பதி லட்டு விவகாரத்தில் பேசப்படும், திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.
இதனை மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது.
மேலும் இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தொழிற் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு
முன் ஜாமின் வழங்கக்கோரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ” திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே அவர்களால் தடை செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பழனி தண்டாயுதபாணி கோவிலின் டிரஸ்டி உறுப்பினராக இருக்கிறார். ஏற்கனவே இது தொடர்பான சுற்றறிக்கையில் இருந்த தகவலையே நான் ட்வீட் செய்திருந்தேன்.
தவறான நோக்கில் தவறான செய்தியை பரப்பவில்லை. நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும், வழக்கு விசாரணைக்கும் ஒத்துழைக்கிறேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி.

“மனுதாரர் X சமூக வலைதளங்களில் பதிவு செய்ததால் மதரீதியான பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியல் செய்யப்படுகிறது. மனுதாரர் மூன்றாம் முறையாக இதுபோன்ற தவறினை செய்துள்ளார். ஆகவே மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் நிஜத்தில் சேவைகளை செய்ய வேண்டும். X தளத்தில் ட்வீட் செய்வதற்கு முன்பாக அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்த மனுதாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு தரப்பில் அவர் பகிர்ந்த தகவல் தவறானது என்றும், பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக ஆவினில் இருந்து மட்டுமே நெய் வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி,
மனுதாரர் 3 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், தனது அலைபேசியை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும், மனுதாரர் செய்த ட்வீட்டை டெலிட் செய்வதோடு, அந்த ட்வீட் உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடப்பட்டது என சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தொடர்ந்து இதுபோல பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும் எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.