தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது,”இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்.” என்ற.
அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகன் ஞானவேல் பேசியதாவது, “வசந்த பாலனும் நாங்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன், அவரது படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போவேன். அர்பன் பாய்ஸ் நிறுவனத்தை நண்பர்கள் நாங்கள் இணைந்து விளையாட்டாக ஆரம்பித்தோம். ஆனால் இன்று மிகவும் சிறந்த ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ரசிகனாக சொல்கிறேன், ‘அநீதி’ திரைப்படம் உங்களை கதைக்குள் ஈர்த்து விடும். ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்ப கலைஞரும் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது, “வசந்தபாலன் ஒரு துருவ நட்சத்திரம் போன்றவர். ஆஸ்திரேலியாவில் நான் வசித்த காலத்தில் அவரது படங்களை தொடர்ந்து பார்த்து ரசிப்பேன். அவரது இயக்கத்தில் நான் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்த பின்னர் அர்ஜுன் தாசின் ரசிகனாக நான் மாறி விட்டேன், சிறு வயதிலேயே மிகுந்த திறமையோடு அவர் திகழ்கிறார். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் செம்மையாக உருவெடுத்துள்ளது, பத்திரிகையாளர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவளித்து மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும், நன்றி.” என்றார்.
அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வரதராஜன் மாணிக்கம் பேசியதாவது, “ஒரு திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து படங்களை தயாரிக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு, அது ‘அநீதி’ மூலம் நிறைவேறி உள்ளது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகை துஷாரா விஜயன் “இயக்குநர் வசந்த பாலன் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்கவர், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஒப்பனை இல்லாமலேயே இப்படத்தில் என்னை மிகவும் அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. அர்ஜுன் தாசுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது, அவர் ஒரு சிறந்த நடிகர். இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் “இயக்குநர் வசந்தபாலன் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறிய போது வில்லன் பாத்திரத்தில் நடிக்க தான் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் சுமார் 3:30 மணி நேரம் எனக்கு கதையை பொறுமையாக விவரித்ததுடன் மட்டுமில்லாமல் இதில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆற்றினார். அடுத்த நாளே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், மீண்டும் ஒருமுறை அவரது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தில் அனுபவமிக்க பல நடிகர்களுடன் நடித்தது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ‘அநீதி’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.” என்றார்
நிர்வாகத் தயாரிப்பாளர் பிரபாகர் “இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அர்ஜுன் தாஸ், துஷாரா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வசந்த பாலன் ஒரு தலைசிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதராகத் திகழ்கிறார். இது அவரை இன்னும் உயரங்களுக்கு இட்டு செல்லும். ‘அநீதி’ திரைப்படத்திற்கு உங்களது முழு ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது, “வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். இயக்குநர் ஷங்கர் சார் ‘வெயில்’ படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து அவருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று வருவார் என்று இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. இந்த படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி.” என்றார்.
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.