- கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற எலெக்டிரிக் இரு சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை கிராமத்தை சார்ந்தவர் தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்து வருகிறார். இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஒலா இரு சக்கர வாகனத்தின் மூலம் அலுவலகம் சென்று வந்துள்ளார்.
வழக்கம் போல் இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு மதுரை – சேலம் புறவழிச்சாலையில் திருக்காம்புலியூர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை வந்துள்ளது.
இதனை பார்த்த தினேஷ் இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு இறங்கி விட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஓலா இரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எரிந்த ஓலா இரு சக்கர வாகனத்தின் மதிப்பு ரூ 1,47,000 என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.