தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் (85) இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த சுப்ரமணியம் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை நீண்ட நேரமாகியும் எழுந்திரிக்கவில்லை பின்னர் மருத்துவர்களை அழைத்துவந்து சோதித்தபோது உறக்கத்திலேயே அவர் இயற்கை எய்தினார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இன்று அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அஜித் தந்தை உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நடிகர் அஜித்குமாருக்கு தொலைபேசி மூலம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் திரை உலகில் பல்வேறு நடிகர், நடிகைகளும் அஜித்தின் தந்தை மறைவுக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அஜித் ரசிகர்கள் அவரது தந்தை மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அஜித் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.