சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “வறுமையின் காரணமாக வீட்டுவேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை திரு.கருணாநிதி அவர்களின் மகனும், மருமகளும் சேர்ந்து நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையாக தாக்கி துன்புறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நன்றாக படிக்க வைக்கிறோம், படிப்புக் கட்டணத்தையும் நாங்களே செலுத்துகிறோம் என ஆசைவார்த்தைகள் கூறி பணிக்கு சேர்ந்தபின் நாள்தோறும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் குடும்பம் என்ற அதிகாரப்போக்கே இதுபோன்ற அறுவறுக்கத்தக்க வன்முறைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடக் காரணம் என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி, மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் தகருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.