பொள்ளாச்சியில், கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் நவ., 2ம் தேதியை கல்லறை திருநாளாக கொண்டாடுகின்றனர். அனைத்து கிறிஸ்துவ குடும்பங்களிலும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மூதாதையர்கள் இறந்ததை தியானித்து, அவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம்.
நேற்று, பொள்ளாச்சி – பாலக்காடு ரோட்டில் உள்ள புனித லுார்து அன்னை, ஆர்.சி., கல்லறை தோட்டத்தில், ஆலய பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடந்தது. அதில், கிறிஸ்தவ குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கல்லறை தோட்டத்தை அலங்கரித்து, பூமாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், கல்லறை திருநாளை முன்னிட்டு, இறந்தவர்களின் நினைவிடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி, கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

வால்பாறை துாய இருதய ஆலய கல்லறை தோட்டத்தில், ஆலயபங்கு தந்தை மரியஜோசப் தலைமையில் திருப்பலி பூஜைகள் நடந்தன. இதே போல், ரொட்டிக்கடையில் புனித வனத்துசின்னப்பர் ஆலயம், புனித அந்தோணியார் ஆலய பங்கு கல்லறை தோட்டத்தில், பங்குதந்தையர் தலைமையில் சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவர்கள் மறைந்த தங்கள் முன்னோர்கள் மற்றும் குடும்பத்தில் மரணம் அடைந்தவர்கள் அடக்கம் செய்த கல்லறையை சுத்தம் செய்து, பூக்கள் தூவி மறைந்தவர்களை நினைத்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2ம் தேதி கிறிஸ்துவர்களால் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு, தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு மறைந்த தங்கள் தாய், தந்தை, கணவன், மனைவி , சகோதரர் மற்றும் உறவினர்கள் கல்லறையை சுத்தம் செய்து கல்லறையை பூக்களால் அலங்கரித்து, ஊதுபத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி மறைந்தவர்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரம், உணவு ஆகியவற்றை படையலிட்டு அவர்களை நினைத்து, அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டியும் கண்ணீர் மல்க கை கூப்பி பிரார்த்தனை செய்தனர்.