ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், கோவை மண்டலப்பிரிவு வரி ஏய்ப்பு குறித்தான புகார்களை கவனித்து வருகிறது. உளவுத்துறை தகவலின் பேரில் 15ஆம் தேதி சில நிறுவனங்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இயக்குநரகம் சோதனை மேற்கொண்டது. அதில் நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி வரவு (ITC) மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
சோதனையில், ஜிஎஸ்டி வருமானம் தொடர்பான OTP களைப் பெறப் பயன்படுத்தப்படும் பல மொபைல்போன்கள், இ-வே பில்கள், போலி பில்கள், பல்வேறு ஆவணங்கள் மற்றும் தரவுகளைக் கொண்ட கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டன. 97 கோடி மதிப்புள்ள போலி விலைப்பட்டியல் (FAKE BILLS) உள்பட முக்கிய ஆவணங்கள், மோசடியில் ஈடுபட்ட நான்கு நிறுவனங்களால் மட்டும் 13 கோடி ரூபாய்க்கு மேல் போலி ஐடிசி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
போலி ஐடிசியைப் பெறுவதற்காக, TMT பார்கள் தயாரிக்கும் ஒரு பெரிய உற்பத்தியாளருக்கு போலி விலைப்பட்டியல்களை வழங்கிய தலைமறைவாக இருந்த இந்தக் கும்பலின் தலைமையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.