தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பலகாரத்துடன், கறி சமைத்து சாப்பிட்டு ஹாயாக நாம் வீட்டில் இருந்த போது, வீதிகளில் குப்பை கழிவுகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு தஞ்சையில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் மட்டன் பிரியாணி. முட்டை, கறி கோலா உருண்டையுடன் வயிறார சாப்பிட வைத்து கெளரவித்தது தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று.
தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்து, டன் கணக்கில் குவிந்த குப்பைகளை சில மணிநேரங்களிலேயே அகற்றி தூய்மை படுத்திய, தூய்மை 100 பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களை உயர்தர உணவகத்தில் மட்டன் பிரியாணி வழங்கி உற்சாகப்படுத்திய தனியார் தொண்டு நிறுவனம். தீபாவளி பண்டிகையை ஒட்டி, தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் வியாபாரிகள் அமைத்திருந்தனர்.

வியாபாரிகள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் மற்றும் பட்டாசு குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை கூட கொண்டாடாமல் சுமார் 200 டன் எடையிலான குப்பை கழிவுகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்தினார்கள். இவர்களை கௌரவிக்க எண்ணிய தனியார் அறக்கட்டளை நிறுவனம் மாநகரில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என 100 பேரை தஞ்சையில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு மதிய உணவுக்காக அழைத்துச் சென்றனர்.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையின் போது பட்டாசு குப்பைகள், வியாபாரம் செய்த துணிமணி பிளாஸ்டிக் குப்பைகள் என தஞ்சை மாநகரம் முழுவதும் டன் கணக்கில் குப்பைகள் சேர்ந்தன. இதனை நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 60 வாகனங்களில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மாநகரம் முழுவதையும் தூய்மைப்படுத்தினர். நேரம் காலம் பார்க்காமல் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 100 தூய்மை பணியாளர்களை உயர்தர அசைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சுட சுட முட்டையுடன் மட்டன் பிரியாணி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அங்கு அவர்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை, மட்டன் கறி, கோலா உருண்டை ஆகியவை சுடச்சுட பரிமாறப்பட்டது. உணவகத்தின் வாசலில் நின்று பார்த்து இந்த ஹோட்டலுககுள் சென்று சாப்பிட முடியுமா என்று கனவிலும் நினைத்து பார்க்காத இவர்கள் உணவகத்தில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதை எண்ணி மனம் நெகிழ்ந்தனர். தூய்மை பணியாளர்கள் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக, தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சந்தானம் கொடுத்து, பன்னீர் தெளித்து வரவேற்கப்பட்டனர்.