கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் ரத்தினபுரி பகுதியில் டேனியல் என்பவருக்கு சொந்தமான காலியான இடத்தில் இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் இறங்கியது. இதனால் மரம் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனை கண்ட பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். நெருக்கமாக வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் மின்னல் இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.