திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆளிப்பட்டியை சேர்ந்தவர் நாகு என்ற நாகரத்தினம் (வயது 23). மணப்பாறை அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.இவரும், கே.உடையாபட்டியை சேர்ந்த அய்யப்பன்(35), மணிகண்டன்(25), முத்தமிழ்செல்வன்(40), கரூர் மாவட்டம் பில்லூரை சேர்ந்த தீனதயாளன்(20) ஆகியோரும் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டியில் உள்ள சித்தர் சமாதிக்கு ஒரு காரில் சென்றனர்.

தரிசனம் செய்த பின்னர், மீண்டும் அவர்கள் அந்த காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அப்போது திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில் சென்டர் மீடியனை தாண்டி கார் சென்றது. அப்போது எதிர் திசையில் கார் வருவதைப்பார்த்த திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சின் டிரைவர் பிரேக் அடித்ததில் பஸ்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று அருகில் உள்ள 10அடி பள்ளத்தில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகினர். மேலும் பஸ் கவிழ்ந்ததில் 30படுகாயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.